
இலங்கையில் வன்னியில் கடைசி கட்ட போரில் குற்றுயிராய் கிடந்த அப்பாவி தமிழர்கள் மீது புல்டோசர்களை ஏற்றி கொன்று, இறந்தவர்களோடு சேர்த்து இராணுவத்தினர் புதைத்தனர் என்று மனித உரிமை குழு கூறியுள்ளது.
இலங்கையில் மனித உரிமைக்காக போராடும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைக்கழக ஆசிரியர் குழுவின் அறிக்கையை லண்டனில் இருந்து வெளிவரும் கார்டியன் பத்திரிகை வெளியிட்டது.
அதில் கூறியிருப்பதாவது:
இலங்கை இராணுவத்தினர் கடைசி கட்ட போரின்போது மேலதிகாரிகள் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ள உத்தரவிட்டபோது அதற்கும் ஒரு படி கீழிறங்கி நடந்து கொண்டனர்.
அப்பாவி மக்கள் பதுங்கி இருக்கிறார்கள் என்று தெரிந்தும் அந்த பதுங்கு குழிகள் மீது இராணுவத்தினர் இராணுவ வாகனங்களை ஏற்றி நசுக்கினர்.
காயம் அடைந்து குற்றுயிராய் கிடந்த அப்பாவி தமிழர்கள் மீது புல்டோசர்களை ஏற்றி கொன்று, அவர்களை இறந்தவர்களுடன் சேர்த்து ஒட்டு மொத்தமாக புதைத்தனர்.
சரணடைந்த விடுதலைப் புலிகளையும் சரணடைய வந்த விடுதலைப் புலிகளையும் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சர்வதேச கருணை கழகம் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையில் கடைசி கட்ட போரின் போது நடந்த அத்துமீறல்கள், சித்திரவதை பற்றி சர்வதேச கமிஷனை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி உள்ளது.
நன்றி : www.paristamil.com
No comments:
Post a Comment